
Montreal சுகாதார மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது; சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன
Canada-வின் Montreal நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு முக்கிய சுகாதார மற்றும் சமூக சேவை மையங்களில் (CISSS) ஏற்பட்ட கணினி செயலிழப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் முடங்கியிருந்த சேவைகள், தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CISSS Laval மற்றும் CISSS Lanaudière ஆகிய மையங்களைப் பாதித்த இந்த தொழில்நுட்பப் பிரச்சினைக்கு, ஃபைபர்-ஆப்டிக் கேபிள் துண்டிக்கப்பட்டதே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு நீடித்த சமயத்தில், அவசர மற்றும் உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவோரைத் தவிர மற்ற நோயாளிகள் Hôpital de la Cité-de-la-Santé மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு CISSS Laval நிர்வாகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருந்தது.
தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்ட போதிலும், அதன் தாக்கத்தினால் சில சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, Laval CISSS இரத்தப் பரிசோதனை மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணி முதல் மதியம் 12 மணி வரை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டன. இரத்தம் மற்றும் பிற மாதிரிகளை சேகரிப்பதற்காக முன்பதிவு செய்திருந்தவர்களை ஊழியர்கள் தொடர்புகொண்டு, மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, CISSS de Lanaudière மையத்திலும் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த இரத்தப் பரிசோதனை, தடுப்பூசி மற்றும் பிற மருத்துவப் பரிசோதனைகளுக்கான முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த மையத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
