
கனடாவில் இந்திய வம்சாவளி பொலிஸ் அதிகாரி கொலை: 18 வயது இளைஞர் கைது; அமைச்சர் ஆனந்தசங்கரி இரங்கல்
கனடாவின் northern Ontario பகுதியில், பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவர் மீது முதல்நிலைக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த அதிகாரிக்கு, இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Ontario மாகாணத்தின் Hearst நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல், Ontario Provincial Police (OPP) அதிகாரிகள் மேற்கொண்டிருந்த விசாரணை ஒன்றின்போது, கான்ஸ்டபிள் Tarun Bali (29) என்பவர் வாகனம் ஒன்றால் திட்டமிட்டு மோதிக் கொல்லப்பட்டதாக OPP ஆணையர் Thomas Carrique செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Gary Anandasangaree தனது சமூக வலைதளப் பதிவில், 'கான்ஸ்டபிள் Tarun Bali-யின் மரணச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் Gary Anandasangaree, கனடா அரசியலில் முக்கியப் பங்காற்றும் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது முதல்நிலைக் கொலைக் குற்றம், ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியது மற்றும் பொலிஸாரிடம் இருந்து தப்பியோடியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 'விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முறையாக முன்வைக்கப்படும்' எனவும் ஆணையர் Carrique மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, OPP எனப்படும் Ontario மாகாண பொலிஸாரின் சங்கம் மற்றும் Ontario மாகாண முதல்வர் Doug Ford ஆகியோரும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இரண்டரை ஆண்டுகளாக OPP-யில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் Bali, மத்திய Ontario-வின் Dufferin பிரிவைச் சேர்ந்தவர் என்றாலும், தற்காலிகமாக James Bay பகுதிக்கு பணி மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, Toronto-வுக்குக் கிழக்கே Cobourg பகுதியில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சார்ஜென்ட் Brandon Malcolm என்ற மற்றொரு OPP அதிகாரி உயிரிழந்த துயரம் மறைவதற்குள், தற்போது மேலும் ஒரு அதிகாரி கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கான்ஸ்டபிள் Bali-யின் குடும்பத்தினரைச் சந்தித்ததாகக் கூறிய ஆணையர் Carrique, 'அவரது இரண்டு வயதுப் புகைப்படத்தில், மற்றொரு பொலிஸ் அதிகாரியின் படத்தைப் பார்த்து அவர் சல்யூட் செய்வதைக் கண்டேன். சிறு வயது முதலே அப்பணி மீது அவருக்கு இருந்த ஆர்வத்திற்கு இதுவே சாட்சி. அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள அதிகாரி மற்றும் சிறந்த குழுப் பணியாளர்' என உருக்கத்துடன் குறிப்பிட்டார். 'எங்கள் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றுகிறார்கள். அவர்களில் ஒருவரை இழப்பது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காகத் தங்கள் இன்னுயிரை நீத்த இந்த மாகாணத்தின் அதிகாரிகள் அனைவரும் உண்மையான கதாநாயகர்கள்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகள் பணியின்போது எதிர்கொள்ளும் பெரும் அபாயங்களை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதாக OPP சங்கம் குறிப்பிட்டுள்ளது. 'OPP சங்கத்தின் சார்பில், கான்ஸ்டபிள் Bali-யின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக அதிகாரிகளுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என சங்கத்தின் தலைவர் David Sabatini தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
