
காசா கூடாரங்களில் எலி மற்றும் ஒட்டுண்ணிகளின் தொல்லை: தூக்கத்தில் குழந்தைகளை கடித்து குதறும் அவலம்
காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியுள்ள தற்காலிக கூடாரங்களில் எலிகள் மற்றும் ஒட்டுண்ணிகளின் பெருக்கம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தூக்கத்தில் இருக்கும் குழந்தைகளின் விரல்களை எலிகள் கடித்து குதறுவதோடு, மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரு சில உடைமைகளையும் அவை சேதப்படுத்தி வருகின்றன. 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, சாலை ஓரங்களிலும் இடிந்த கட்டிடங்களுக்கு மேலேயும் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள நிலையில், இந்த சுகாதார சீர்கேடு வேகமாக பரவி வருகிறது.
தெற்கு காசாவின் Khan Younis பகுதியில் வசிக்கும் 20 வயதான Amani Abu Selmi என்பவருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், அவர் தனது திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த பாரம்பரிய உடைகள் மற்றும் பைகளை எலிகள் கடித்து சிதைத்துவிட்டன. "எனது மகிழ்ச்சி அனைத்தும் பறிபோய்விட்டது, அது இப்போது மனவேதனையாக மாறியுள்ளது" என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
வடக்கு காசாவின் Tuffah பகுதியில் வசிக்கும் Khalil Al-Mashharawi என்பவரது மூன்று வயது மகனை சில வாரங்களுக்கு முன்பு எலி கடித்தது. கடந்த வெள்ளிக்கிழமை அவரும் எலி கடிக்கு ஆளானார். தனது குழந்தைகளை பாதுகாக்க அவரும் அவரது மனைவியும் இப்போது முறை வைத்து தூங்குவதாக கூறுகின்றனர். எலிகளை கட்டுப்படுத்த வழியில்லாத நிலையில், அவை தரையோடுகளை பெயர்த்துக்கொண்டு உள்ளே வருவதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
இந்த நிலைமை குறித்து Al Shifa மருத்துவமனையின் தலைவர் Mohamed Abu Selmia கூறுகையில், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் எலி விஷம் போன்றவற்றை காசாவிற்குள் கொண்டுவர இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், வரும் கோடைகாலத்தில் இந்த பாதிப்பு இன்னும் மோசமடையும் என எச்சரித்துள்ளார். எலிகளால் பரவக்கூடிய காய்ச்சல் மற்றும் பிளேக் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
கழிவுநீர் மேலாண்மை மற்றும் துப்புரவு பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதால், கூடாரங்களுக்கு அருகிலேயே கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. இது எலிகள் இனப்பெருக்கம் செய்ய சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதிநிதி Reinhilde Van de Weerdt கூறுகையில், இந்த ஆண்டு மட்டும் காசாவில் சுமார் 17,000 பேருக்கு எலி மற்றும் ஒட்டுண்ணி தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒரு சிதைந்த வாழ்விடச் சூழலில் இது தவிர்க்க முடியாத விளைவு என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
