
"கருத்துக் கணிப்புகளை உடைத்தெறிந்து அதிமுக வீறுகொண்டு எழும்": எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவின் பித்தலாட்ட நாடகங்கள் ஒருபோதும் எடுபடாது என்றும், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும் அவர் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில், தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் திட்டமிட்டே பரப்பப்படும் பொய் தகவல்கள் என அவர் சாடியுள்ளார். "தில்லுமுல்லு முன்னேற்றக் கழகத்தினர்" தமிழக மக்களையும், அதிமுக தொண்டர்களையும் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் ஆசி அதிமுகவிற்கு இருப்பதாகவும், எனவே இத்தகைய கணிப்புகளைக் கண்டு யாரும் மனம் தளர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரலாற்று ரீதியாக கருத்துக் கணிப்புகள் அதிமுகவிற்கு எதிராக இருந்தபோதெல்லாம், கட்சி அவற்றை முறியடித்து வெற்றி பெற்றுள்ளதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். குறிப்பாக, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் நிலவிய சூழலை நினைவு கூர்ந்த அவர், கணிப்புகளைப் பொய்யாக்கி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எப்படி ஆட்சி அமைத்தது என்பதை விளக்கினார். இந்தத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், தோல்வி பயம் காரணமாகவே திமுக தலைவர் ஸ்டாலின் இத்தகைய மாய பிம்பங்களை உருவாக்கி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகளைச் செய்யவும் கலவரங்களை உருவாக்கவும் வாய்ப்புள்ளதாக எச்சரித்தார். இதன் காரணமாக, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் அதிமுக பூத் ஏஜெண்ட்டுகள், வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் அதீத கவனத்துடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இறுதியாக, தமிழகத்தில் நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சி ஒருபோதும் அமையாது என்றும், மக்களின் நலனுக்காக உழைக்கும் அதிமுகவின் ஆட்சி நிச்சயம் மலரும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
