
ருதுராஜ் கெய்க்வாட்டின் அபார சதம்: இலங்கை 'ஏ' அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது இந்தியா 'ஏ'
இலங்கையின் தம்புள்ளையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியில், இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஏ அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், ருதுராஜ் கெய்க்வாட்டின் அபார சதம் மற்றும் தலைவர் திலக் வர்மாவின் அரைச்சதத்தின் உதவியுடன் வலுவான நிலையை அடைந்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் 2 ஓட்டங்களிலும், வைபவ் சூர்யவன்ஷி 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யாவும் 32 ஓட்டங்களில் வெளியேற, அணி நெருக்கடிக்கு உள்ளானது.
இந்த இக்கட்டான நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டுடன் கைகோர்த்த அணித்தலைவர் திலக் வர்மா, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இலங்கை பந்துவீச்சைத் திறம்பட எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட், 114 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக ஆடிய திலக் வர்மா 60 ஓட்டங்கள் எடுத்து தனது பங்களிப்பை வழங்கினார்.
இறுதியில், இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை ஏ அணி தரப்பில், மொஹம்மது ஷிராஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமிக கருணாரத்ன, கருக சங்கேத் மற்றும் வனுஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
