
அரசியல் பிரவேச வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்: 'தாய் தமிழ்' என்ற புதிய அமைப்பை அறிவித்தார்
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக), நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. தவெக கட்சியின் துண்டுடன் அவர் இருக்கும் புகைப்படம் வைரலானதை அடுத்து, இந்த வதந்தி மேலும் வலுப்பெற்றது.
இந்நிலையில், தனது அரசியல் பிரவேசம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் தற்போதைக்கு அரசியலில் நுழையப் போவதில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "வைரலான அந்தப் புகைப்படம், ஒரு ரசிகர் எனக்கு அன்பாகக் கொடுத்த துண்டை அணிந்தபோது எடுக்கப்பட்டது. நான் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மதிக்கிறேன். ஆனால், நான் இப்போது எந்தக் கட்சியிலும் சேரவில்லை" என்று விளக்கமளித்தார்.
மேலும், "அரசியல்வாதியாக வருவதை விட, மக்களுக்கு ஒரு சேவகனாக இருக்கவே நான் விரும்புகிறேன். எனக்கு அப்துல் கலாம் ஐயாதான் வழிகாட்டி. அவரது பாதையில் பயணிக்க, அரசியல் சாராமல் மக்களுக்குச் சேவை செய்வதற்காக 'தாய் தமிழ்' என்ற புதிய அமைப்பைத் தொடங்குகிறேன்" என்றும் அவர் அறிவித்தார்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகிய மூன்று முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தி மக்கள் பணியாற்றும் என்று குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவது குறித்து பரிசீலிப்பேன் என்றும், அது குறித்த முடிவை மக்களிடமே விட்டுவிடுவதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
